சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மழலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் உற்சாக துள்ளலுடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 22 ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில் இந்தியா 14 மணி நேர தன்னார்வ பொது ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்தது. அதைத் தொடர்ந்து தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டது. அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது. பின்னர் சில மாதங்களுக்கு பிறகு உயர்கல்வி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டு, ஆன்லைன் மூலமே தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள்  வந்துள்ளதால் இந்திய அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்தது. மேலும் மாநில அரசுகள் மாநில நிலமைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் தளர்வுகள் வழங்கவும் அனுமதி வழங்கியது. அதன்படி தமிழ்நாட்டில் தொற்று பரவல் குறைந்ததால், தமிழக அரசு ஏராளமான தளர்வுகளை அறிவித்து, கல்வி நிலையங்களையும் நேரடியாக திறக்க உத்தரவிட்டது. அதன்படி  பிப்ரவரி 1ந்தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையும் மற்றும் கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இநத் நிலையில், கடந்த வாரம் உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டான், பிப்ரவரி 16ந்தேதி (இன்று)  முதல் நர்சரி பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கினார். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளி,  நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகளை (Play Schools) திறக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்ததையடுத்து ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். பல குழந்தைகள் ஆரவாரமுடன் பள்ளிக்கு வந்தாலும், சில குழந்தைகள் பள்ளிகளுக்குள் வர மறுத்து அழுத காட்சிகளும் அரங்கேறின.

இன்றுமுதல் மேலும் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு

தமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் 100% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

ஏற்கனவே கொரோனா அதிகரிப்பு காரணமாக 50% மட்டுமே அனுமதி வழங்கியிருந்த நிலையில்,தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.