சென்னை

சையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என நடிகை குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.  சமூக வலைத்தளங்களில் இந்த நிகழ்ச்சி பேசுபொருளாகியுள்ளது. பல ரசிகர்கள் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி நடக்காமலேயே இருந்திருக்கலாம். இது மிகப்பெரிய ஸ்கேம் என்று சர்ச்சையான கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

நெட்டிசன்கள் பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராகப் பல விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்  ஆனால் ஏ.ஆர் ரகுமானுக்கு ஆதரவாகத் திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதில் நடிகை குஷ்பு டிவிட்டரில்,

”நாம் அனைவரும் இந்த கடினமான சமயத்தில் ரகுமானுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். ரகுமான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக் கொள்பவர்.  

டையமண்ட் பாஸ் இருந்தும் உள்ளே அனுமதிக்கப்படாதவர்களில் எனது மகள் மற்றும் அவரது நண்பர்களும் இருந்தனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது தான்.

இருப்பினும் ஏ.ஆர் ரகுமான், மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் பொறுப்பேற்க முடியாது. இந்த குளறுபடிகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம்”

எனப் பதிவிட்டுள்ளார்.