திருவனந்தபுரம்: ‘கேரள மாநிலத்தில் முதன்முதலாக  திருநங்கை  ஒருவர் சட்டம் படித்து வழக்கறிஞராக  பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தற்போதைய நவீன காலத்தில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் உயர மத்திய மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை அறிவித்து உள்ளன.

இந்த நிலையில், கேரளாவில் பத்ம லக்ஷமி என்ற திருநங்கை  அங்குள்ள எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் படித்து பட்டம்  படித்து வெற்றி பெற்று, கேரள பார்கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.  கேரள பார் கவுன்சில், பத்ம லஷ்மியை சமீபத்தில்தான் வழக்கறிஞராக தேர்வு செய்தது. இதனால், பத்ம லக்‌ஷ்மி கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

திருநங்கை பத்மலட்சுமிக்கு  கேரள மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் பத்ம லக்ஷமிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில்,  “வாழ்க்கையில் பல இன்னல்களை கடந்து இன்று கேரளாவின் முதல் வழக்கறிஞராக உருவெடுத்துள்ள பத்ம லக்ஷமிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றில், ஏதாவதொறு விஷயத்தில் முதல் ஆளாக வந்து சாதிப்பது மிகவும் கஷ்டமான விஷயம்தான். இவரது விஷயத்தில், முன்னோடி என கூற யாரும் இல்லாத சமயத்தில் இவருக்கு வந்திருக்கும் தடைகள் முடியாததாக இருந்திருக்கும். இவரை அமைதியாக்கவும், ஊக்கமளிக்காமல் இருப்பதற்கும் இவருடன் ஆட்கள் இருந்திருப்பார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி இன்று பத்ம லஷ்மி முதல் திருநங்கை வழக்கறிஞராக உருவாகி, சட்டத்தின் வழியே வரலாறு படைத்துள்ளார்” என்று கேரள மாநிலத்தின் அமைச்சர் பத்ம லஷ்மிக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.

மேலும், “உண்மையான நீதிக்கான பாதையில் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பதை பத்மலஷ்மி கடந்து வந்த பாதையே அவருக்கு உணர்த்தியுள்ளன. அதனால்தான், அவர் இன்று மறுக்கப்பட்ட குரல்களின் முன்னோடியாக நிற்கிறார். பத்ம லக்ஷமியின் வாழ்க்கை, அவரைப்போல பல கனவுகளுடன் வாழும் திருநங்கைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்” என்றும் அமைச்சர் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த பதிவிற்கு பலரும் பலதரப்பட்ட கமெண்டுகளின் மூலம் தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர்.