சோட்டாணிக்கரை பகவதி அம்ம்ன் — கேரளதேசம்

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரையில் 2000 ஆண்டுகள் பழைமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது.கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது பெண்களின் சபரி மலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மனுக்கு உண்டு.இந்த அம்மனை வழிப்பட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமும், தீர்க்க ஆயிளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பில்லி, சூனியம் ஏவல் போன்றவற்றில் இருந்தும் அம்மனை வழிப்பட்டு பக்தர்கள் பலன் பெறுகிறார்கள்.

ருத்திராட்ச சிலை :

மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த சிலை ரூத்திராட்சத்தால் செய்யப்பட்டது. இங்கு அதிகாலை நிர்மால்யம் தரிசனம் முடிந்தும் தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. கேரளாவின் பகவதி வழிபாடு நடைபெறும் கோவில்களில் இந்த கோவிலுக்கும் முக்கிய பங்கு உள்ளது.

பெண்களின் சபரிமலை என்ற சிறப்பும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு உண்டு.

மூன்று ரூபங்களில் அம்பாள் :

இந்த கோவிலில் மிகவும் சிறப்பு அம்சமாக ஒரே நாளில் 3 வித ரூபங்களில் பகவதி அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.

காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதி ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்,

நண்பகலில் சவுபாக்கியம் அருளும் அன்னை மகாலட்சுமி ரூபத்தில் ஆழ்சிவப்பு வண்ண உடையிலும்,

மாலையில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக கரும் நீலவண்ண உடையிலும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் அருள்பாலிக்கிறார். சோட்டானிக் கரை முன்பு மிக அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது.

பசு வடிவில் வந்த அம்பாள் :

இங்கு ஆதிவாசிகள் அதிகளவு வாழ்ந்து வந்தனர். ஆதிவாசிகளின் தலைவனான கண்ணப்பன் என்பவர் பசுக்களை கொன்று அதன் இறைச்சி உண்பவராக இருந்தார். ஒரு நாள் அவரது மகள் தந்தையால் கொல்லப்பட இருந்த பசு மாட்டை காப்பாற்றினாள்.

மகள் மீது அதிக பாசம் கொண்ட கண்ணப்பன் அன்று முதல் தானும் பசுவை வதைப்பதில்லை என்று சபதம் செய்தார். ஆனாலும் அவர் முன்பு செய்த பாவம் காரணமாக அவரது அன்பு மகள் உயிர் துறக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட கண்ணப்பன் கனவில் அவரது மகளால் காப்பாற்றப்பட்ட பசு தோன்றியது. தான் பசு வடிவில் வந்த தேவி என்றும், கண்ணப்பனின் மாட்டு தொழுவத்தில் தான் சிலையாக காட்சி அளிப்பதாகவும் அருகில் மகாவிஷ்ணு சிலையும் இருக்கும் என்று கூறி விட்டு அந்த பசு மறைந்து விட்டது.

மறுநாள் தொழுவத்திற்கு சென்று பார்த்த கண்ணப்பன் அங்கு தேவி சிலையும், மகாவிஷ்ணு சிலையும் இருப்பதை பார்த்து அதை இயற்கை கோவிலாக்கி வழிபாடு செய்யத் தொடங்கினார். அந்த கோவில் புதர்கள் அடர்ந்து காடாக மாறியது.

இந்த நிலையில் ஒரு பெண் புல்வெட்டும்போது அவரது அரிவாள் பட்டு விக்ரகத்தில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதுபற்றி அங்குள்ள பெரிய நம்பூதிரியிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் தேவபிரசனம் பார்த்து தேவியின் பெருமையை உணர்ந்து மீண்டும் வழிபாடு நடைபெற ஏற்பாடு செய்தார். அந்த தேவியே சோட்டானிக்கரை பகவதி அம்மனாக அருள்பாலிக்கிறார்.

12 ஆயிரம் புஷ்பாஞ்சலி :

இந்த மண்டபத்தில் உள்ள கொடிமரம் அருகில் நின்று பார்த்தால் மூலஸ்தானத்தில் உள்ள தேவி பகவதியை கண் குளிர தரிசிக்கலாம். குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பவர்கள் பிரகாரத்தின் வடக்கு பக்கம் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் விசேஷ பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார்கள்.

இங்கு 12 ஆயிரம் புஷ்பாஞ்சலி செய்வதும், அம்மனுக்கு சிவப்பு நிற பட்டுபுடவை காணிக்கையாக கொடுப்பதும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் இங்கு உயிர் பலி கொடுக்கப்பட்டாலும் தற்போது அது கைவிடப்பட்டு, சைவ வழிபாடு நடை பெறுகிறது.

பில்லி சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து நலம் பெற்று செல்கிறார்கள். பக்தர்கள் மனம் சார்ந்த கோளாறுகள் கொண்ட தங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து அன்னையை வழிபட்டு பூரணகுணம் பெற்று செல்வதை காணமுடிகிறது.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பிரச்சித்தி பெற்ற பூஜைகளில் ஒன்று தான் குருதிபூஜையாகும். இந்த கோவிலின் கீழ்காவில் நடைபெறும் குருதிபூஜையில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு அம்மன் அருள்பெற்று செல்கிறார்கள்.

முன்பு இங்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே குருதிபூஜை நடத்தப்பட்டு வந்தது. இப்போது இந்த பூஜை ஒவ்வொரு நாளும் நடத்தப்படுவது சிறப்பாகும். ஆண்டுதோறும் இந்த கோவிலில் நடைபெறும் சோட்டானிக்கரை மகம் என்ற திருவிழா மாசிமகத்தில் நடைபெறுகிறது.

அப்போது ஏராளமான பக்தர்கள் இங்கு திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்கிறார்கள். திருமணமான பெண்களுக்கு தீர்க்க ஆயுளும், திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்பதும், மாசி மகம் வழிபாடின் ஐதீகமாக இருக்கிறது. இங்கு தேவியின் வலது பக்கம் மகாவிஷ்ணு இருப்பதால் அம்மே நாராயணா, தேவி நாராயணா, லட்சுமி நாராயணா, பத்ரி நாராயணா என்று பக்தர்கள் போற்றி பாடுகிறார்கள்.

அமைவீடம் கேரள மாநிலம் எர்ணகுளத்தில் இருந்து 20 கீலோமீட்டர் தூரத்தில் உள்ளது.