சென்னை:

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்.


நேற்று தமிழகத்தில் 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 4,985 பேர்களில் 1,269 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87,235 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகள் எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுகிழமை பொது முடக்கத்தை முன்னிட்டு சனிக்கிழமையே காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் அதிக அளவில் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்.
அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே மீன் விற்பனை செய்ய அனுமதி. அதோடு காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்குள் மீன்வாங்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.