1ramdoss
பெங்களூரு:
ர்நாடகாவில் வரும் 9ந்தேதி நடைபெற இருக்கும் பந்தையடுத்து, அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப கோரி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரியில் தண்ணீர் திறக்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து வந்த கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற ஆணைக்கும், தமிழகத்தின் எதிர்ப்புக்கும் பணிந்து தண்ணீர் திறந்து விட்டிருப்பது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
கடைமடை பாசனப் பகுதிகளுக்கு நீர் சென்றடைய வேண்டுமானால் மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு குறைந்தபட்சம் 20,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அவ்வாறு தண்ணீர் திறந்து விட வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு 1.72 டி.எம்.சி. வீதம் 60 நாட்களுக்கு குறைந்தபட்சம் 103.2 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும்.
காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தாலும், இன்று வரை தமிழகத்திற்கு 103.33 டி.எம்.சி நீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழக எல்லைக்கு வந்துள்ளது. எனினும், தமிழகத்திற்கு நடப்பாண்டில் 33 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டிருப்பதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார். அவரது கணக்குப்படியே வைத்துக் கொண்டாலும் தமிழகத்திற்கு கர்நாடகம் இன்னும் 80 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்.
1காவிரி
தமிழ்நாட்டிற்கு அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் 13 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள தண்ணீரை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையிலான காவிரி மேற்பார்வைக் குழுவிடம் முறையிடுவதன் மூலம் தான் பெற முடியும்.
உச்சநீதிமன்றம், அடுத்த 3 நாட்களில் காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டிருந்தது. அதன்படி காவிரி மேற்பார்வைக் குழுவிடம் தமிழக அரசு இன்றைக்குள் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இன்று காலை வரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் காவிரி மேற்பார்வைக் குழுவை உடனடியாக அணுக வேண்டும்.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது. தமிழகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் பேரூந்துகள் இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்த் திரைப்படங்களை திரையிடுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழர்களின் உயிர்களும், உடமைகளும் சூறையாடப்பட்டன. அதேபோன்ற நிகழ்வுகள் இப்போதும் நடக்காமல் தடுக்க தமிழர்கள் வாழும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளை அழைத்து வந்து தமிழர்களின் பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.