சென்னை,

நேற்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நின்று மரியாதை செய்யாமல் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து சங்கர மடம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்  வெளியீட்டு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் விஜயேந்திரருக்கு எதிராக தமிழ் ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் அகராதி வெளியீட்டு விழா நேற்று சென்னையில்  நடை பெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால்  நூலை வெளியிட்டார். விழா ஆரம்பமானபோது,தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையில் உட்கார்ந்திருந்தார்.

ஆனால்,  விழா முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில, விஜயேந்திரர் செயல் குறித்து காஞ்சி சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், தமிழ்த்தாய் வாழ்த்தின்போது, சங்கராச்சாரியார் எழுந்து நிற்கும் மரபு இல்லை என்றும், அப்போது, விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாகவும்  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமாக கடவுள் வாழ்த்து பாடலின் போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் தியான நிலையில் இருப்பது வழக்கம். அதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்தின் போது கடவுள் வாழ்த்து முறையை பின்பற்றி தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,  தேசிய கீதத்தின் போது எழுந்து நின்றது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்காத விஜயேந்திரர் செயலுக்கு தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி தமிழ் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விஜயேந்திரரின் இந்த அடாவடி செயலுருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டுவிட்டரில்   #TamilInsulted என்ற ஹேஸ்டேக் போட்டு பலரும் பதிவிட்டு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.