சென்னை: 10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்றும், காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் அமைக்கப்பட இருப்பதாகவும், தமிழகம் ஏழை மாநிலம் அல்ல என்றும்  சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில்  கடந்த 18-ஆம் தேதி 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பொது மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. 21, 22 மற்றும் 23-ஆம் தேதியும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இன்று இறுதிநாள் அமர்வில் பட்ஜெட் விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து வருகின்றனர்.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் ஆற்றிய பதிலுரை வருமாறு

தமிழகத்தில் 75%க்கும் அதிகமானோர் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். 66% பேர் இருசக்கர வாகனம் வைத்துள்ளனர். 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் செல்போன் வைத்துள்ளனர். அதனால்  தமிழகம் ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

19 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகவும், அதற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

பொருளாதார ஆலோசனைக்கான குழுவினர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் பணியாற்றுகின்றனர் எனவும் அமைச்சர் பிடிஆர் கூறினார். தமிழக அரசு நியமித்த, பொருளாதார ஆலோசனைக்காக நியமிக்கப்பட்டிருக்கும் ஐந்து பேர் கொண்ட சிறப்புக் குழு சம்பளமே வாங்காமல் முதலமைச்சர் மீது கொண்டிருக்கும் மரியாதைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பணியாற்றுகிறார்கள் என்று சட்டமன்றத்தில் பதிவு செய்தார்.

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே பட்ஜெட்டின்போது,  மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் இனி “மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி மேம்பாட்டு திட்டம்” என மாற்றப்படுகின்றது என்று அறிவித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்க 12 ஆம் வகுப்பு முடித்த அரசுப் பள்ளி மாணவியர்கள் கல்லூரியில் சேர்ந்து அவர்களின் படிப்பு முடியும் வரை வங்கிக் கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.