டெல்லி: 

ரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  டெல்லி பாட்டியாலா  நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஆகஸ்டு 2ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், அஇஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதியில்  வாக்கு சேகரித்தபோது, அவர்களின் வாக்கை பெறும் நோக்கில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி  நாதுராம் கோட்சே, அவர் இந்து தீவிரவாதி என கூறினார்.

கமலின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்து அமைப்புகள் கமலுக்கு எதிராக போர்க்கொடி தூக்க உள்ளன.

இந்த நிலையில், கமலின் பேச்சு குறித்து,  இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணு குப்தா என்பவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் , இந்துக்களுக்கு எதிராக பேசியதால் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில்  ஏன் இதில் தலையிடுகிறீர்கள்? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர்.

அப்போது வாதாடிய மனுதாரர் வழக்கறிஞர்,  தான் ஒரு இந்து என்பதால் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளேன் என்று கூறினார்.

இதையடுத்து  கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரங்களை ஆய்வு செய்த பின் கமலுக்கு சம்மன் அனுப்பலாமா, வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறி  வழக்கை ஆக.2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.