சென்னை

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ஆழ்வார்பேட்டையில் வெள்ள நிவாரணப் பணிகளை தொடங்கிவைத்தார். பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது கமலஹாசன்,

”குறுகிய காலத்திற்குள் கனமழை பெய்து வருவது சமீபகாலமாக வட இந்தியாவிலும் உலகின் சில பகுதிகளிலும் அடிக்கடி பெய்து வருகிறது. இது சவாலான காலகட்டம். பருவநிலை மாற்றத்தால் இதுபோன்ற பேரழிவுகள் அடிக்கடி நிகழும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அதற்கு நாம் தயாராக வேண்டும். 

இயற்கை பேரிடர்களைத் தடுப்பது குறித்து எந்த அரசியல்வாதியாலும் உறுதியளிக்க முடியாது. திமுக, அதிமுக-வை குற்றம் சொல்ல இது நேரமில்லை. இதுபோன்ற பேரிடர்களைத் தடுக்க புதிய வழிகளைக் கண்டறியப் பேரிடர் மேலாண்மைத் துறையில் வல்லுநர்களுடன் மாநில அரசு ஆலோசனை நடத்த வேண்டும். 

இப்போது அரசு செய்ய வேண்டியது நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தி நோய் பரவாமல் தடுப்பதுதான். பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள், முறையான கிருமி நாசினிக்குப் பிறகே அலுவலகங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 5,000 வெள்ள நிவாரணப் பெட்டிகளை முதற்கட்டமாக எங்களது மாவட்டச் செயலாளர்கள் விநியோகம் செய்வார்கள். 5000 பேருக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது, அது தேவைப்படும் வரை செயல்படும்.” 

என்று கூறி உள்ளார்.