சென்னை:

மக்கள் நீதி மய்யத்தில் சேர அழைப்பு விடுத்து தனக்கும் ஈமெயில் வந்ததாக டென்ஷனுடன் தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாத்ம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.  இந்த கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் கட்சியில் சேர அழைப்பு விடுத்து பலருக்கும் ஈ மெயில் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த அழைப்பு தனக்கும் வந்ததாக டென்ஷன் ஆகியிருக்கிறார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை.

இது குறித்து அவர், “மக்கள் நீதி மய்யத்தில் சேர எனக்கும்
ஈ- மெயிலில் அழைப்பு வந்தது. பாஜக மாநில தலைவரான நான் எப்படி கமல் கட்சியில் உறுப்பினராவேன். அவர்களது  உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடைபெறுகிறது என்பது இது தெள்ளத்தெளிவாக தெரிகிறது” என்று காட்டத்துடன் கூறினார்.

கமல் அரசியலுக்கு வருவது குறித்து ஆரம்பம் முதலே கடுமையாக விமர்சித்துவருகிறார் தமிழிசை என்பது குறிப்பிடத்தக்கது.