கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.

பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் சென்னையில் இன்று (மே 7) காலமானார். அவருக்கு வயது 78.

மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான கல்தூண் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் திலக். டைகர் தாத்தாச்சாரி, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, ஆறிலிருந்து அறுபது வரை உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் இவர் நடித்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரைத்துறையில் இருந்து வந்த நடிகர் திலக்கின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.