சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் மாணவியின் பெற்றோர் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

கள்ளக்குறிச்சி சின்னசேலம் சக்தி உறைவிடப்பள்ளி  மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்த மாணவியின் உடற்கூறாய்வின்போது, தங்களது தரப்பு மருத்துவரையும் அனுமதிக்கக் கோரி மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது.

இதனால், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மறு உடற்கூறாய்வு பரிசோதனை செய்த நிலையில், உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் 2மணி அளவில் மாணவியின் உடலை பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.