சென்னை: நீதிபதி தலைமையில் பறக்கும்படை அமைத்து கண்காணிக்க வேண்டும் என  ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  தற்போது வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அமைத்து கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் ஒரு செயற் குற்றவியல் நீதிபதி 2 அல்லது 3 காவலர்கள் கொண்ட பறக்கும் படைகளை அமைக்க வேண்டும்.

மூன்று ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய தொகுப்பிற்கு ஒரு பறக்கும் படை இடம்பெற வேண்டும்.

பறக்கும் படையினர் 24 மணிநேரமும் செயல்பட வேண்டும்

உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யலாம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதையும், மாதிரி நடத்தை விதி கண்டிப்பாக அமலில் உள்ளத்தையும் பறக்கும் படை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.