சென்னை: 
சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால்  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர  பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக வழக்குத் தொடுக்கப்பட்டது. மேலும் இதில் உயர் நீதிமன்ற இருவர் அமர்வில் நீதிபதிகள் இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. மேலும் ரூ 7 கோடி சொத்து குவித்ததாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2013ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளதால், வழக்கின் விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,இந்த வழக்கில் மேற்கொண்டு வாய்தா கேட்கக் கூடாது எனத் தெரிவித்தார். மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால் அடுத்த விசாரணையின் போது இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.