சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்த துறை அமைச்சராக, தற்போதைய திமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்துவரும், செந்தில் பாலாஜி, பலருக்கு வேலைவாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட நூற்றுக்கணக்கான வழக்குகள் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், அமைச்சர் செந்தில்பாலாஜி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தன்மீது வழக்கு தொடுத்தவர்கைளை மிரட்டி வழக்குகளை வாபஸ் பெற வைக்கப் பட்டதாக கூறப்படடது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், தன்மீதா இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில், வேலைக்காக கொடுத்த இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது அந்த வழக்கையே திரும்பப்பெற லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து இந்த வழக்கை நடத்துவது ஆச்சரியமளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்த‌து. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதனா பண மோசடி தொடர்பான வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.