பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், நாளை (16ந்தேதி) விடுதலையாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

வருமானத்துக்கு மீறி சொத்துக்களை வாங்கி குவித்ததாக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மீதான வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதும்,  மற்ற மூவருக்கும், தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், சிறை தண்டனையில் இருந்து தப்பினார். ஆனால்,  சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலம் முடிவடைந்ததும், அபராதத் தொகையான  ரூ.10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் தொகையை கட்டிவிட்டு, சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து  கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், சுதாகரன் விடுதலையாகவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

ஆனால், சுதாகரனுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையான  ரூ.10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் செலுத்த அவரது குடும்பத்தினரோ, சிவாஜி குடும்பத்தினரோ முன்வராத நிலையில், அவர் , கூடுதலாக ஒரு வருடம் தண்டனை காலத்தை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், வருகிற 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடுதலையாக இருந்தார்.

இந்த நிலையில், அவர்மீதான நன்னடத்தை, ஏற்கனவே சிறைவாசனம் அனுபவித்தது போன்ற காரணங்களால், அவரது தண்டனை காலத்தல் விலக்கு அளிக்குமாறு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி, அவரது தண்டனை காலத்தில், 89 நாட்கள் கழிக்கப்பட்டு அக்டோபர் 16ம் தேதியாக விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை  அதிகாரப்பூர்வமாக அறித்து உள்ளது.

இதனால், நாளை காலையிலேயே பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சுகாதாரன் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.