தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்து மறைந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுமார் 18 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கூறப்பட்டது.  

முதலில் குற்றவாளி என்றும் பின்னர் மற்றொரு நீதிபதியால் நிரபராதி என்றும் தீர்ப்பளிக்கப்பட்ட அந்த வழக்கின் பின்னணி……. சற்று பின்னோக்கி செல்லலாம்….

1996 ஜூன் 16 1991:  முதல் 1996-ம் ஆண்டு வரையிலான பதவி காலத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அப்போது ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் சுவாமி,  தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, சென்னை செசன்சு கோர்ட்டில்வழக்கு தாக்கல் செய்தார்.

இச்சொத்துக்களின் அன்றைய மதிப்பு 66.65 கோடியாகும்.

1996 ஜூன் 27:  நீதிபதி ராமமூர்த்தி இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு உத்தரவிட்டார்.

1996 ஆக.14:  விசாரணைக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதா சென்னை ஐகோர்ட்டில் மனு.

1996ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இந்த வழக்கை  1996 டிசம்பர் அன்று அரசுத்தரப்பு வழக்காக மாற்றி உத்தரவிட்டது.

1996 செப்.7:  வழக்கு விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு நியமனம்.

1996 செப்.18:  ஜெயலலிதா மீது வழக்குபதிவு.

1996 செப்.19:  ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி வீடுகளில் போலீசார் சோதனை.

1996 டிச.7:  ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.  ஊழல் வழக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு. ஜெயலலிதா வீட்டில் இருந்து 19 வாகனங்கள், 7,109 சேலைகள், 389 ஜோடி செருப்புகள், 214 சூட்கேஸ் கள், 26© கிலோ தங்க&வைர நகைகள், 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்த தாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவிப்பு.

1997 ஜன.3:  ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை; வழக்கை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைப்பு, விசாரணை தொடக்கம்.

1997 ஜூன் 4:  ஊழல் தடுப்பு சட்டம் 1988, இந்திய தண்டனைச் சட்டம் 120-பி, 13(2), 13(1) (இ) ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்.

1997 அக்.1:  சொத்து குவிப்பு வழக்கு தொடர அனுமதித்த கவர்னர் பாத்திமா பீவியின் உத்தரவுக்கு எதிரான மனு உள்ளிட்ட 3 மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி.

1999 நவம்பர் 19-ந் தேதி முதல் 2001 ஜூலை 18-ந் தேதி முடிய விசாரணை, 259 சாட்சியங்கள் பதிவு, வாக்குமூலம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை.

2001 மே.15:  தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி. முதல்அமைச்சராக ஜெயலலிதா தேர்வு.

டான்சி வழக்கில் 2000-ம் ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை காரணம் காட்டி அவர் முதல்அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது, செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு.

2001 செப்.21:  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று முதல்அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலகல்.

2002 பிப் 21:  டான்சி வழக்கில் தண்டனை ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆண்டிபட்டி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி.

2002 மார்ச் 2:  தமிழக முதல்-அமைச்சராக மீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்பு. அரசு வக்கீல்கள் 3 பேர் பதவி விலகல். அதைத் தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் சென்னை தனிக்கோர்ட்ட டில் 79 சாட்சிகளிடம் மறு விசாரணை. அரசு தரப்பு சாட்சிகள் சிலர் பிறழ்சாட்சி.

2003 ஜெயலலிதா மீண்டும் முதல்அமைச்சராக பதவியேற்றதால் வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்றகோரி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு.

2003 நவ. 18:  சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

2003 டிச.27:  ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூரில் தனிக்கோர்ட்டு அமைப்பு, ஏ.எஸ்.புச்சாபுரே நீதிபதியாக நியமனம்.

2005 பிப். 19:  பி.வி.ஆச்சார்யா அரசு சிறப்பு வக்கீலாக நியமனம்.

2005 மே 9:  லண்டன் ஓட்டல் மற்றும் சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றை ஒன்றாக விசாரிக்க கோரி ஜெயலலிதா மனு. ஜெயலலிதாவின் கோரிக்கை ஏற்பு.

2005 ஜூலை 14:  லண்டன் ஓட்டல் மற்றும் சொத்து குவிப்பு வழக்கை ஒன்றாக விசாரிக்க கூடாது என கோரி க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி. லண்டன் ஓட்டல் வழக்கு வாபஸ்.

2010-ல் தமிழில் இருந்த ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு, வழக்கு ஆவணங்கள் 88 ஆயிரம் பக்கங்கள், குற்றப்பத்திரிகை 13 ஆயிரத்து 600 பக்கங்கள். 252 அரசு தரப்பு சாட்சிகள், 99 எதிர்தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு.

2011 – குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறக்கோரி அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா மனு.

2011 அக். 20, 21- ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம்.

2011 நவ. 21, 22- மீண்டும் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம், தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி வாக்குமூலம்.

2012 அக். 12:  அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா பதவி ராஜினாமா.

2013 பிப்.2:   அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம்.

2013 ஆக. 13:  அரசு தரப்புடன் தி.மு.க. விடுத்த கோரிக்கையை நீதிபதி  பாலகிருஷ்ணா ஏற்பு.

2013 ஆக. 23: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அரசு சிறப்பு வக்கீல் பவானி சிங்கை நீக்கும்படி தி.மு.க. கர்நாடக ஐகோர்ட்டில் மனு.

2013 ஆக. 26:  அரசு சிறப்பு வக்கீல் பவானி சிங்கை நீக்கி கர்நாடக அரசு உத்தரவு, நீக்கத்தை எதிர்த்து பவானி சிங் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்.

2013 செப்.30:  பவானி சிங்கை நீக்கிய கர்நாடக அரசின் உத்தரவு சுப்ரீம் கோர்ட்டில் ரத்து. தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் 25 நாட்கள் இறுதி வாதம்.

செப்டம்பர், வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார்.

புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டார்.

சசிகலா வக்கீல் மணிசங்கர் 9 நாட்கள், சுதாகரன் மற்றும் இளவரசி தரப்பு வக்கீல் அமித் தேசாய் 8 நாட்கள் இறுதி வாதம்.

தொடர்ந்து பவானி சிங் 15 நாட்கள் இறுதி வாதம்.

2014 ஆக.28:  சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20&ந தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவிப்பு.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் ஆஜராக உத்தரவு.

2014 செப். 16:  சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் தேதி 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அறிவிப்பு. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தனிக்கோர்ட்டை பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்றியும் நீதிபதி உத்தரவு.

2014  செப்டம்பர் 27:  விசாரணை முடிந்து, ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஜெயலலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

செப்டம்பர் 29, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மேலும் இவ்வழக்கின் தண்டனையிலிருந்து “ஜாமின்” வழங்க வேண்டும் எனவும் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தனது வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்தார்.

அக்டோபர் 1, செயலலிதாவின் பி ஜாமின் மனு மற்றும் மேல்முறையீட்டு மனுவை விடுமுறைக்கால நீதிபதி ரத்னகலா விசாரிக்க மறுத்தார்.

 அக்டோபர் 7, ஜெலலிதாவின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது

பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஹெச்.எல்.தத்து, மதன் பி லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

அவருக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கியது  உச்ச நீதிமன்றம்.

 மேலும், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நடைமுறைகளை நிறுத்திவைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

பின்னர் உச்சநீதிமன்றம் வேறு நீதிபதியை வைத்து விசாரணை செய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதி குமாரசாமியை நியமனம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இம்மனுவை 41 நாட்கள் விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.

மே-11, 2015, குற்றம்சாட்டப்பட்ட  4 பேரையும் விடுதலை செய்து பரபரப்பான தீர்ப்பளித்தார்.  அதிகபட்சம் 3 நிமிடங்களிலேயே தமது தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி குமாரசாமி. இதனடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

23 ஜுன் 2015: ஜெ ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்டிருந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை, கர்நாடக அரசு இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

16 ஜூலை 2015: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசின் மேல்முறை யீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

27 ஜூலை 2015: கர்நாடக அரசு மற்றும் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்கின் விசாரணை முடிவுற்று தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30மணிக்கு வழங்கப்பட இருக்கிறது.