ஈரோடு: தலைமைச் செயலத்தில் தேர்தல் ஆணையரை சந்தித்துவிட்டு திரும்பிய ஜெயக்குமார், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள் என்று விமர்சித்ததுடன், டிடிவி கூறியதுபோல,  இரட்டை இல்லை சின்னத்திற்கு மவுசு குறையவில்லை, என கூறியவர், தமிழ்நாடு அரசு காவல்துறை, பொது மக்களிடம் தர்ம அடி வாங்கும் காவல் துறையாக  உள்ளது என்றும் விமர்சித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்று புகார் மனு அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது, இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக அரசு ஜனநாயக அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு யாரும் செல்ல கூடாது என்பதற்காக அதை தடுக்க பல இடங்களில் திமுகவை சேர்ந்த சிலர் , சட்டவிரோதமாக பந்தல்கள் அமைத்து 1000 ரூபாய் பணம், உணவு கொடுக்கும் நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறியது.  இது திருமங்கலம் பார்முலாவை மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

திமுக ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் மற்றும் அவரது மகன் தவிர மற்ற ஆளும் திமுக அமைச்சர்கள் 30 பேரும் ஈரோட்டில் தான் முகாமிட்டு உள்ளனர். எது எப்படி இருந்தாலும் ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் தான் மகத்தான வெற்றி பெறுவார். நிச்சயம் திமுக கூட்டணி ஜெயிக்காது என கூறினார்.

மேலும், செய்தியளார்களிடன் கேள்விக்கு பதில் கூறியவர், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, ஏற்கனவே  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணம் என்பதால் அவர் இலங்கைக்கு சென்றுள்ளார். ஆனால் பாஜக சார்பில் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார் என்றும் எங்களது கூட்டணியில் எந்த விதமான பிரச்னையும் இல்லை என்றார்.

இரட்டை இலை சின்னம் குறித்து டிடிவி தினகரனின் விமர்சனம் குறித்து எழுப்பப்பட்ட  கேள்விக்கு பதில் அளித்தவர்,  இரட்டை இல்லை சின்னம் மவுசு குறைந்தது என்று சொல்வது சரி அல்ல. டி டி வி. தினகரன் ஒரு நன்றி கெட்டவர். சசிகலா, டி டி வி தினகரன், ஓ பி எஸ் ஆகியோரை புரட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது என்றார்.

 திமுக 2021 சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற  செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது, பொய் சொல்வதற்கு அளவு உள்ளது. தேர்தல் வாக்குறுதியை 85% நிறைவேற்றியதாக முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் கல்விக் கடனை ரத்து செய்தார்களா? ,நீட் தேர்வை ரத்து செய்தீர்களா?, பயிர் சேதம் குறித்து என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்று எதிர்கேள்வி எழுப்பியனார்.

தேர்தல் ஆணையரை சந்தித்தது ஏன் என்ற கேள்விக்கு,   ஜனநாயக அமைப்பில் புகார் கொடுப்பது என்பது அடிப்படையான உரிமை. நாங்கள் சொல்வதை சொல்லிவிட்டோம் தேர்தல் கமிஷனுக்கு மேல் நீதிமன்றம் என்ற ஒன்று உள்ளது . அங்கு சென்று பார்த்துக்கொள்வோம் என்றார்.

சமீக காலங்களில் காவல்துறையினர்மீதான தாக்குதல் குறித்த கேள்விக்கு,  திரைப்படங்கள் போல தமிழ்நாட்டில் காவல்துறையினர் கொல்லப்படுவது சாதாரணமாக நடந்து வருகிறது. எங்கள் ஆட்சியில் காவல் துறை என்றால் மிடுக்கு இருக்கும். இன்று அப்படி இல்லை, காவலர்களை  யார் அடிக்க போகிறார்கள் என்பது போல் தோற்றம் உள்ளது.  பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கும் காவல் துறையாக  தற்போதைய காவல்துறை உள்ளது.

இவ்வாறு கூறினார்.