சென்னை:
ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ஜெய்பீம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும், வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை.  ஜெய்பீமில் இடம்பெற்ற காலண்டர், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என அறியவில்லை; 1995ஆம் ஆண்டை பிரதிபலிப்பதே அதன் நோக்கம், ஒரு சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது நோக்கமும் அல்ல. பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டுமே நடிகர் சூர்யா நோக்கமாக கொண்டிருந்தார். இயக்குனராக என்பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த திரைப்பட ஆக்கதி எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் சிறிதளவு இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இந்த பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் என் உள்பூர்வமான  வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.