சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, தொழிற்நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் வகையில், முகூர்த்தக்கால் நட்டப்பட்டு உள்ளது. இது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த மாதம் 16ந்தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. மேலும், விழாக்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன், கோவில்களையும் வாரத்தில் 3 நாட்கள் அடைக்கவும், வார இறுதிநாளில் பொதுமுடக்கமும் தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழகஅரசு அறிவித்துள்ள பொதுமுடக்கம் காரணமாக, ஏழை எளிய மக்கள், வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மதுரை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளது. அலங்காநல்லூரில் வரும் 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் முகூர்த்தக்கால் நடப்பட்டுள்ளது. விழாவில் அரசின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்காமல் ஊர் விழா குழுவினர் மட்டும் முன்னேற்பாடு பணிகளை துவக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், தமிழகஅரசு சாமானிய மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்குகிறது என்பது கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அரசு வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என விழா குழுவினர் அறிவித்துள்ளனர்.

என்னமோ போடா மாதவா….