சொர்க்கவாசல் இல்லாத திவ்ய தேச கோவில்கள் பற்றி தெரியுமா?
108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் இருக்கும்.
ஆனால், கும்ப கோணம் ஸ்ரீ சாரங்க பாணி ஆலயத்தில் சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் கிடையாது.
இதற்குக் காரணம் இருக்கிறது.
இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார்.   மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணமுடிப்பதற்காகத் திருமால் தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார்.  எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது.
மேலும், இங்குள்ள உத்ராயண, தட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்குத் திறக்கப்பட்டிருக்கும்.
இதே போன்று சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் இல்லாத ஆலயங்கள் விபரம் கீழே!
1)காஞ்சிபுரம் பரமேஸ்வர விண்ணகரம் எனப்படும் ஸ்ரீ பரமபத நாதப் பெருமாள் ஆலயம்.
இவ்வாலய மூலவரின் திருநாமம் ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் என்றாலும் இங்குச் சொர்க்கவாசல் உத்ஸவம் கிடையாது.
இப்பெருமாளுக்கு பரமபதநாதன் என்ற திருநாமமும் உண்டு.
2)ராமானுஜர் அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்.
ராமானுஜர் அவதரித்த தலம் என்பதால் ஸ்ரீபெரும்புதூரை நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதுகிறார்கள்.
எனவே இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது.
வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவப் பெருமாளும் ராமானுஜரும் பூதக்கால் மண்டபத்திற்கு எழுந்தருளும்போது மணிக்கதவுகள் சொர்க்க வாசல் திறக்கப்படுவதுபோல திறக்கப்படும்.
3)திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜபெருமாள் ஆலயம்.
திருக்கண்ணபுரம் பூலோகத்து விண்ணகரம் என்பதால், இத்திருக்கோவிலில் பரமபத வாசல் கிடையாது.
இவனது திருக்கோவிலே பரமபதமானதால் மற்ற வைணவக்கோவில்களில் உள்ளது போன்று
வைகுண்ட வாசல் இங்கு இல்லை.
4)திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாசன் பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவியை மணமுடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக வந்ததால் இக்கோவில் பூலோக வைகுண்டமாகத் திகழ்கிறது.  இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும் என்பதால், இங்கு சொர்க்கவாசல் கிடையாது.
இங்கு வைகுண்ட ஏதாசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது.
இங்கும் குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி கோவிலில் உள்ளது போன்று தட்சிணாயன வாசல் உத்தராயண வாசல் என இரு வாசல்கள் உள்ளது. இங்குள்ள உத்ராயண, தட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.