மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயர்பெற்ற மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில், பாரம்பரிய விளையாட்டுக்களான தமிழக அரசு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளுக்கு தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியுள்ள மாநில அரசு, நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பல்வேறு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. மேலும் கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பான பணிகளை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் ஆய்வு செய்தார். காளைகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள், பார்வையாளர்கள் அமரும் கேலரி, ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் இடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து,   மதுரையில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் தேதிகள் இறுதி செய்யப்பட்டன. அதன்படி,

ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும்,

ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும்,

ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும்

போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. , காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.