‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.

அதை தொடர்ந்து தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் . இது சூர்யா நடிப்பில் உருவாகும் 39-வது படமாகும். இந்தப் படம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இருளர் பழங்குடியினர் பிரச்சனையை பேசும் திரைப்படம் இது. அவர்களுக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா வருகிறார்.

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இந்தப் படத்துக்கு ‘ஜெய் பீம்’ எனத் தலைப்பிட்டுள்ளனர். இதில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

‘ஜெய் பீம்’ படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியாகிறது.

இப்படத்தின் சென்சார் அப்டேட் மற்றும் ரன்னிங் டைம் வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஜெய் பீம்’ படத்தின் ரன்னிங் டைம் 164 நிமிடம் (2 மணிநேரம் 44 நிமிடம்) என்றும், இப்படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சூர்யா நடித்துள்ள படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்படுவது இது 3-வது முறை. ஏற்கனவே நந்தா, ரத்த சரித்திரம் ஆகிய படங்களுக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு ஜெய் பீம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. யூடியூபில் இதுவரை ஒன்றரை கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கிலும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

தற்போது இந்த படத்தின் அனல்பறக்கும் ட்ரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.