சென்னை: வருமான வரி முறைகேடு தொடர்பாக திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் இன்று 5வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்டுள்ள சோதனைகளின்போது, ஏராளமான ஆவணங்கள், மூட்டை மூட்டையாக பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

 எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்து பதவி சுகம் பெற்றவர் ஜெகத்ரட்சகன். அவரது மறைவுக்கு பிறகு,   ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சி நடத்தி வந்தார். அது போனியாகத நிலையில்,  கடந்த 2009இல் அவர் திமுகவில் ஐக்கியமானார்.  பின்னர்,  திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக,  மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி மற்றும் பல இடங்களில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள்  என ஏராளமான தொழில்கள் உள்ளன.

இவர்மீது ஏற்கனவே வெளிநாட்டு பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரது சில சொத்துக்களை முடக்கி கி உள்ளது. கடந்த 2020இல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்துள்ளது. தொடர்ந்து சட்ட விரோத வெளிநாட்டு முதலீடு புகாரில் அவரது ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.

இந்த நிலையில், அவர்மீது,  இதற்கிடையே இவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார்கள்  தொடர்பாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறருது. சென்னையில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, மருத்துவக் கல்லூரி என அவருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களிலும் வருமானவரித்துறை அதிரடி சோதனையை ஆரம்பித்தனர். 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த ரெய்டு இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

ஆரம்ப கட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை  நடத்தப்பட்ட நிலையில், பாதிக்கு மேற்பட்ட இடங்களில், ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இன்னும் சில இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை அடையாற்றில் உள்ள ஜெகத்ரட்சகன்  வீடு, தி. நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.மேலும், பாரத் பல்கலைக்கழகம், பாலாஜி மருத்துவ கல்லூரி, சவீதா கல்வி குழுமம் ஆகியவற்றிலும் ரெய்டு தொடர்ந்து நடக்கிறது. இந்த ரெய்டின்போது ஏராளமான ஆவணங்கள், பண மூட்டைகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக ஊடகங்களில் செய்தி பரவி வருகின்றன. மேலும், ஜெகத்ரட்சகனின் வீட்டில் இருந்து 2 பைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த கருப்பு நிற பைகளில் பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால்,  இந்த ரெய்ட்டில் என்னவெல்லாம் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த வருமானவரித்துறை இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.