சென்னை

சிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கை வருமான வரித்துறை கை விட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 1996-97ம் மதிப்பீட்டு ஆண்டிற்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என கூறி அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.   கடந்த 2001ம் ஆண்டு சசிகலாவின் அதிகாரம் பெற்ற நபர் அளித்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்த தகவலின் அடிப்படையில், 1996-97 மதிப்பீட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு 4 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரத்து 100 ரூபாய் எனத் தீர்மானித்த வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரி, செல்வ வரியாக 10 லட்சத்து 13 ஆயிரத்து 271 ரூபாயைச் செலுத்த  சசிகலாவிற்கு உத்தரவிட்டார்.

சசிகலா இதை எதிர்த்துத் தாக்கல் செய்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து ஏற்றுக் கொண்ட வருமான வரித்துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், சட்டத்திற்குட்பட்டு மீண்டும் மதிப்பீடு செய்யவும், 40 லட்ச ரூபாய் கடனை கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளவும் மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டது.  இதை எதிர்த்து வருமானவரித் துறை ஆணையர் தரப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது.

இன்று இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, வருமான வரித்துறை தரப்பில் ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான மதிப்புடைய வழக்குகளைக் கைவிடுவது என மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் சசிகலா மற்றும் இளவரசி மீதான செல்வ வரி தொடர்பான நடவடிக்கையைக் கைவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது

இதனை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருமான வரித்துறை தரப்பில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.