தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.

இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தயாரிப்பாளரும், வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் தனது மனைவி ஆர்த்தி கணேஷ் மற்றும் மகள் பிரீத்தா கணேஷ் ஆகியோருடன் முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கினார்.