டில்லி

மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகை இயந்திரங்கள் தனியார் நிறுவனத்தால் சோதிக்கப்பட்டதாக “தி குவிண்ட்” செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைமுறைகளில் எந்த ஒரு தனியார் நிறுவனம் அல்லது தனியார் இயந்திரங்கள் விவகாரத்தில் பயன் படுத்தவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.   ஆனால் பல தனியார் ஆலோசனை நிறுவனங்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகை இயந்திரங்கள் ஆகியவை சோதனை செய்யப்பட்டதாக தி குவிண்ட் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்த செய்தியின் விவரம் வருமாறு.

தி குவிண்ட் ஊடகம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுப்பிய வினாவில் ”மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் வாக்கு ஒப்புகை இயந்திரங்கள் ஆகியவற்றை எலக்டிரானிக் கார்பரேஷன் ஆஃப் இந்தியா என்னும் நிறுவனம் தயாரித்து வருகிறது.   இந்த நிறுவனம் ஆலோசகர்களாக மும்பையைச் சேர்ந்த  டி அண்ட் எம் கன்சல்டிங் நிறுவன பொறியாளர்களை நியமித்துள்ளது.

அத்துடன் பல தனியார் பொறியாளர்கள் 2019 மக்களவை தேர்தலில் பல தனியார் பொறியளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.   இவர்கள் மிகவும் ரகசியமான பணிகளான மின்னணு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகை இயந்திரங்கள் பரிசோதனை, பராமரிப்பு,  வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்ட  சோதனை என பல பணிகளைச் செய்துள்ளனர்.

ஆனால் தேர்தல் ஆணையம்  இந்த இயந்திரங்கள் தயாரிப்பில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என அதன் பிறகும் மறுத்துள்ளது.  இதன் மூலம் தேர்தல் ஆணையம் உண்மையை மறைத்து மக்களைத் திசை திருப்புவது தெளிவாக தெரிகிறது.

இது குறித்து மேலும் விசாரித்ததில் பொறியாளர்கள் சிலர் கடந்த 2017 உத்தரகாண்ட் ச்டடப்ப்பேரவை தேர்தலில் பணி அமர்த்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.   அவர்களில் சிலர் கடந்த 2019 மக்களவை தேர்தலிலும் மற்றும் 2018ல் நடந்த மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நேரத்திலும் பணி புரிந்துள்ளனர்.

இந்த இயந்திரங்களை உருவாக்கிய எலக்டிரானிக் கார்பரேஷன் நிறுவனத்திடம் தேர்தல் நேரத்தில் பணி புரிய போதுமான பொறியாளர்கள் இல்லாத நிலை இருந்துள்ளது.  எனவே இந்த நிறுவனம் வெளி  நிறுவன ஊழியர்களைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.    ஆனால் இதை தேர்தல் ஆணையம் மறைப்பது ஏன் எனத் தெரியவில்லை.” என அந்த செய்தியில் காணப்படுகிறது.