வேலூர்

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போகிறாரா என்ற கேள்விக்கு நடிகை குஷ்பு பதில் அளித்துள்ளார்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முத்க் தலைமையில் வேலூரில் ஏ.சி.எஸ். இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவ மையம்,இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம் மற்றும் இலவச கணினி பயிற்சி மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பு மற்றும் திரைப்பட இயக்குநர் சுந்தர் .சி ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

அப்போது குஷ்பூ செய்தியாளர்களிடம்,

“பெருவாரியான தொகுதிகளில் ஜெயிக்கும் என்று சொல்லும் பா.ஜ.க. ஏன் கூட்டணிக்காகத் தேடுகிறார்கள் என்று திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி விமர்சனம் வைக்கிறார்.  நாங்கள்தான் ஜெயிக்கப் போகிறோமே. அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்.  

கமலஹாசனுக்கு மாநிலங்களவையில் ஒரு சீட் கொடுத்துள்ளார்கள். தி.மு.க.,வில் பிரசாரம் செய்வதற்கு யாரும் இல்லை. தி.மு.க.,வில் கமல்ஹாசன் போல ஒரு முகம் பிரசாரம் செய்வதற்குத் தேவை. அதைத்தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் நினைத்துள்ளார். முதல்வர் போனால் கூட்டம் வராது. கூட்டத்திற்காக முதல்வருக்குக் கமல் தேவை.  

பிரதமர் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கையால் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பா.ஜ.க., வில் இணைகிறார்கள். கடந்த 65 ஆண்டுக் கால காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததைக் கடந்த 10  ஆண்டுகளில் மோடி செய்து காண்பித்துள்ளார். இதுதான் காங்கிரசுக்கும் பா.ஜ.க.,வுக்கும் உள்ள வித்தியாசம். 

பிரதமர் மோடி தமிழகம் வருவதை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது. மோடி வரும்போது தமிழகத்தில் மிகப்பெரி ய எழுச்சி ஏற்படுகிறது. அவர் தமிழகம் வருவதில் அவர்களுக்கு என்ன வருத்தம். தி.மு.க.,வினர் பயத்தில் தான் இது மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன்.நாடு முழுவதும் பிரசாரம் செய்யச் சொன்னாலும் இறங்கி பிரசாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்ய வந்துள்ளேன். 

வேலூர் தொகுதிக்கான வெற்றிச் சின்னமாகிய ஏ.சி.எஸ். என் பக்கத்திலேயே அமர்ந்திருக்கிறார். நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் ஏ.சி. சண்முகம் தான் வெற்றி பெறப் போகிறார். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.” 

என்று கூறினார்.