பெங்களூரு: மருத்துவ சிகிச்சைக்காக துபாயிலிருந்து பெங்களூரு வருவதாகவும், துபாயில் தன்னால் மருத்துவ செலவை சமாளிக்க முடியவில்லை என்றும் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ரூ.1500 கோடி ஐஎம்ஏ மோசடியில் சிக்கிய முகமது மன்சூர் கான்.

தற்போது மன்சூர் கான் வெளியிட்டுள்ளது 7 நிமிட வீடியோ. அதில், விமான டிக்கெட்டுகளை புக் செய்துவிட்டதாகவும், இன்னும் 24 மணிநேரத்தில் இந்தியா திரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தன்னிடமிருந்து பணத்தைப் பறித்துக்கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் சமூகவிரோத சக்திகளிடமிருந்து மீண்டும் தனது பணத்தைப் பெற உதவுமாறு காவல்துறை மற்றும் நீதித்துறைக்கு அவர் வீடியோ மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மாதம் இந்தியாவை விட்டு தப்பியதிலிருந்து கான் வெளியிட்டுள்ள இரண்டாவது வீடியோவாகும் இது. முதல் வீடியோவில், தான் ஜுன் 16ம் தேதி மீண்டும் பெங்களூரு திரும்ப விரும்புவதாகவும், ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை என்றும், அனைத்து முதலீடுகளையும் திரும்ப செலுத்துவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அரசியல்வாதிகள் மற்றும் சமூகவிரோத சக்திகளால் தான் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாய் கூறியுள்ள அவர், தனது உடல்நிலை சரியில்லை எனவும், கடந்த ஒரு மாதமாய் தான் படுக்கையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் கான்.