சென்னை: ஐபிஎல் 2024ம்ஆண்டு நடப்பு தொடருக்கான போட்டிகள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்கிய நிலையில், சிஎஸ்கே அணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பெங்களூரு அணியை தோற்கடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  அமோக வெற்றி பெற்றது.

ஐபிஎல் 17வது சீசன் தொடர் நேற்று (மார்ச் 22ந்தேதி) சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது.  முதல் போட்டியில், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி அமோகமாக  வெற்றி பெற்றது.

முதல்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்வதாக கூறி களமிறங்கியது. ஆரம்பத்தில் சூப்பராக ஆடிய பெங்களூரு அணி வீரர்கள்,  சிஎஸ்கே பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அதன்படி  20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணி சார்பில் அனுஜ் ராவத் 48 ரன்களும் தினேஷ் கார்த்திக் 38 ரன்களும் சேர்த்திருந்தனர். சென்னை அணி சார்பில் முஸ்தபிகுர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி யிருந்தார்.

இதையடுத்து, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்  தலைமையிலான சிஎஸ்கே அணி மட்டையுடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார். தொடக்கத்திலேயே ஆட்டம் சூடுபறக்கும் வகையில்,   இருவரும் தாங்கள் எதிர் கொண்ட முதல் பந்தினை பவுண்டரிக்கு விளாசினர்.  இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால், எதிர்பாராத வகையில்,  நான்காவது ஓவரில் ருதுராஜ் 15 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ரஹேனா களமிறங்கனர். அவரும் கெய்க்வாட்டும் சேர்ந்து, ரன்களை குவித்தனர். இந்த நிலையில்,   7வது ஓவரின் முடிவில் அதிரடியாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த டேரில் மிட்ஷெல் அதிரடியாக சிக்ஸர்கள் பறக்கவிட சென்னை அணியின் ஆட்டத்தைக் கண்டு அரங்கமே குலுங்கியது. இறுதியில்  சென்னை அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 92 ரன்கள் சேர்த்தது.

அணியின் ஸ்கோர் 99 ரன்களாக இருந்தபோது ரஹானே தனது விக்கெட்டினை 27 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். இதையடுத்து மிட்ஷெல்லுடன் ஷிவம் துபே இணைந்து கொண்டார். 10.3 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்களை எட்டியது. பெங்களூரு அணி வீரர்கள் விக்கெட் வீழ்த்த தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர்.  ஆனால் நடைபெறாத நிலையில்,  இறுதியில் சென்னை அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.