சென்னை:  சேப்பாக்கத்தில் மேக் ஸ்டேடியத்தில் இன்று  சென்னை-குஜராத் அணிகள்  இடையே ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளதால்,  நள்ளிரவு 1மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.

அதுபோல இலவச பேருந்து மற்றும் மின்சார ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் கோலாகலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிலையில், இன்றைய போட்டியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்  நடைபெற உள்ளது. இன்று நடைபெறும்  7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது.

இதனையொட்டி இன்று இரவு 11:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (26-3-2024) அன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, இன்று இரவு 11:00 மணி முதல் அதிகாலை 01:00 மணி வரை (27-03-2024 – 1.00 AM)மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்பதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும்.

மேலும், போட்டிக்குப் பிறகு, அரசினர் தோட்டம் /புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையங்களில், கூட்ட நெரிசல் இருப்பதால் மேலும் பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆன்லைனில் (CMRL mobile App, Paytm app, Phonepe app, WhatsApp, ONDC etc ) மூலம் பயணச்சீட்டை பெறலாம் அல்லது மைதானத்திற்கு செல்வதற்கு முன் ஏதேனும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பெற்றுகொள்ளலாம்.

மேலும், பயணிகளின் வசதிக்காக அரசினர் தோட்டம் மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர்.
எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூ.50/ செலுத்தி பெற்றுக்கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் வெளியேறலாம் .

இரவு 11.00 மணிக்குமேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்து கொள்கிறது.

மேலும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு ரயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியை காண சென்னை சேப்பாக்கம் வரும் ரசிகர்களுக்கு மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லை என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்றிரவு 11.20 மற்றும் 11.45 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வேளச்சேரிக்கு ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில்,10.40 மற்றும் 11.05 மணிக்கு வேளச்சேரியிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு ரயில் புறப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.