புதுடெல்லி: காமன்வெல்த் போட்டியிலிருந்து ‘துப்பாக்சிச் சுடுதல்’ நீக்கப்பட்டிருப்பதால், 2022ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) தலைவர் நரீந்தர் பத்ரா, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரெண் ரிஜிஜிவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக ஐஓஏ சார்பாக கூறப்படுவதாவது; வரும் செப்டம்பர் மாதம் 3 முதல் 5 வரை ருவாண்டா நாட்டின் கிகாலியில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளுக்கான மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதில்லை என்று ஐஓஏ தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிடபிள்யூஜி தேர்தலிலிருந்தும் இந்தியப் பிரதிநிதிகள் விலகிக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சிடபிள்யூஜி அமைப்பில் ஒரு குறிப்பிட்ட (காலனியாதிக்க) மனோநிலையிலேயே இருக்கும் நபர்களுக்கு நிலைமையைப் புரிய வைக்க சில முடிவுகளை எடுத்தாக வேண்டியுள்ளது.

இந்தியா 1947ம் ஆண்டிலேயே சுதந்திரம் பெற்றுவிட்டது என்றும், அது காலனி நாடு அல்ல என்றும், உலகின் 5வது பெரிய பொருளாதாரம் என்றும் அவர்கள் உணர வேண்டும்.

துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா வழக்கமாக அதிக பதக்கங்களைப் பெறும். கடந்த 2010ம் ஆண்டு நடந்த போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் மட்டுமே இந்தியா மொத்தம் 30 பதக்கங்களைப் பெற்றது. எனவே, துப்பாக்கிச் சுடுதலை சிடபிள்யூஜி போட்டிகளிலிருந்து நீக்குவது இந்தியாவை கடுமையாக பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.