சென்னை:

எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கு சீட் வாங்கித் தருவாதாக ரூ. 84 கோடி மோசடி செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட தயாரிப்பாளர் மதனிடம் இருந்து சிறை அதிகாரிகள் 15 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த மூவேந்தர் மூவிஸ் திரைப்பட நிறுவனத்தின் அதிபர் மதன். இவர், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மருத்து சீட் வாங்கித் தருவதாக 123 பேரிடம் ரூ.84.27 கோடி பெற்று மோசடி செய்துவிட்டார். சுமார் ஆறு மாத காலம் தலை மறைவாக இருந்த அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திருப்பூரில் வைத்து கடந்த 21-ம் தேதி கைது செய்தனர்.

தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று அவரை சிறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தலைமறைவாக இருந்தபோதே, தனது தோழிகளுடன் உல்லாசமாக உலா வந்தார் என்றும் நிறைய பணப்புழக்கம் மதனிடம் இருந்தது என்றும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது சிறையிலும்  பணப்புழக்கத்துக்கு குறைவின்றி மதன் இருக்கிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.