டில்லி:

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் பெண் குழந்தைகள் அதிகளவில் தத்தெடுக்கப்பட்டுள்ளது. தத்தெடுக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 60 சதவீதம் பெண் குழந்தைகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..

லோக்சபாவில் கடந்த மாதம் 22ம் தேதி மத்திய அரசு சார்பில் எழுத்துப்பூர்வ பதில அறிக்கை ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘2017-18ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் தத்தெடுக்கப்பட்ட 12 ஆயிரத்து 273 குழந்தைகளில், பெண் குழந்தைகள் மட்டும் 60 சதவீதமாகும். தத்தெடுப்புக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதை தொடர்ந்து குழந்தைகள் தத்தெடுப்பு 20 சதவீதம் வீழ்ச்சியை ச ந்தித்துள்ளது.

2014-15ம் ஆண்டில் 3 ஆயிரத்து 988 என்று இருந்த எண்ணிக்கை 2016-17ம் ஆண்டில் 3 ஆயிரத்து 120 ஆக குறைந்துள்ளது. 50 ஆயிரம் அனாதை குழந்தைகள் இந்தியா வசம் உள்ளபோதும் இதில் ஆயிரத்து 600 குழந்தைகள் மட்டுமே தத்து கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், ‘‘ 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் ரீதியான பிரச்னைகளும், 2 வயதை கடந்த குழந்தைகளும் இருப்பது தான் தத்தெடுப்பு குறைவுக்கு காரணம். இந்திய குழந்தைகளை தத்தெடுத்தில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.

கடந்த 4 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 134 குழந்தைகளை இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் தத்தெடுத்துள்ளனர். இதில் 69 சதவீதம், அதாவது ஆயிரத்து 481 பேர் பெண் குழந்தைகள் ஆவர்.

அமெரிக்கர்கள் 776 இந்திய குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். இதில் 566 பேர் பெண் குழந்தைகள். இதை தொடர்ந்து இத்தாலி 463 பெண் குழந்தைகள், ஸ்பெயின் 247 பெண் குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை தான் வெளிநாட்டு பெற்றோர்கள் அதிகளவில் தேர்வு செய்துள்ளனர்.

நாடுகளுக்கு இடையிலான தத்தெடுப்பில் மகாராஷ்டிரா 549 குழந்தைகளுடன் முன்னிலையில் உள்ளது. இதை தொடர்ந்து டில்லி 205 குழந்தைகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவிற்குள் மகாராஷ்டிரா 2 ஆயிரத்து 771 குழந்தைகளை தத்தெடுத்து முதலிடத்தில் உள்ளது. இதில் ஆயிரத்து 543 பேர் பெண் குழந்தைகள். ஆயிரத்து 228 பேர் ஆண் குழ ந்தைகள் ஆவர். இதை தொடர்ந்து ஆயிரத்து 140 குழந்தைகளுடன் கர்நாடகாவும், 786 குழந்தைகளுடன் மேற்குவங்கம் 3ம் இடத்திலும் உள்ளது’’ என்று அந்த பதில் அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.