பெரம்பூர்: ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் கண்ணையா வீடு மற்றும் அவரது மகன் வீடுகளில்  வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளராக இருந்து வருபவர் கண்ணையா. இவரது வீடு பெரம்பூர் அருகே ஜவஹர்நகரில் உள்ளது. இவரது மகன் பிரகாஷ் வீடு பெரம்பூரில் உள்ளது. பிரகாஷ் சாஃப்ட்வேர் கம்பெனி நடத்தி வருகிறார்.

திமுக தலைவர் போட்டியிடும் கொளத்தூர் பகுதியில் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் யூனியன் தலைவர் கண்ணையாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள்.  அதனால், கண்ணையா மூலம் வாக்குகளை பெற திமுக திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக கண்ணையாவின் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, கண்ணையா மற்றும் அவரது மகன் வீடுகளில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது. கண்ணையாவின் மகன் வீட்டில்  முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.