கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பரும், பொறியாளருமான சந்திரசேகரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரிதுறையினர் இன்று 3வது முறையாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் செயலாளராக இருக்கிறார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் தீவிர ஆதரவாளர். வேலுமணியின் பினாமி என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது வீடு கோவையில் வடவள்ளி பகுதியில் உள்ளது. இவரது மனைவி  ஷர்மிளா கோவை மாநகராட்சி 38 வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார்.இன்று காலை திடீரென அவரதுக்கு வீட்டுக்கு வந்த  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை  மேற்கொண்டு வருகின்றனர்.

சந்திரசேகரன் வீடு, பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு  உள்ளிட்ட  அவருக்கு சொந்தமான 6  இடங்களில் சோதனை நடத்தி வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது, வருமான வரித்துறை அதிகாரிகள் 8  பேர் ஆய்வு மேற்கொள்ள வந்தனர்.  பல்வேறு ஆவணங்களை கேட்டு அவரது வீட்டில் சோதனை  நடத்தினர்.   வருமானவரித்துறையினரின் சோதனையை முன்னிட்டு பொறியாளர் சந்திரசேகரின் வீட்டின் முன்பு போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 2 முறை சோதனை நடந்த நிலையில் 3-வது முறையாக வருமானவரிதுறை சோதனை நடைபெற்று வருகிறது.