சென்னை,

மிழகம் முழுவதும் மணல் குவாரிகளை மூட மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் 29ந்தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித்துறையிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், அரசே விற்பனை செய்யும் என்றும் புதிய நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இது மணல் இறக்குமதியாளர்களுக்கு கெடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுற்றுச்சூழல் நலன் கருதியும், வருங்கால சந்ததியினரின் நலன் கருதியும் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் என்றும்,  புதிய மணல் குவாரிகள் அமைக்கக்கூடாது என்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி  மணல் குவாரிகளுக்கு தடை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.

மேலும், தமிழகத்திற்கு தேவையான மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்றும், அதற்கு தமிழக அரசு முறையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது.

சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்ல லாம் என்றும் ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது.

மதுரை ஐகோர்ட்டின் தடை உத்தரவை  நீக்க அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதிக்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியது.

இந்நிலையில், மணல் விற்பனைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதில், வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யப்படும் மணல் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் இறக்குமதி செய்யப்படும் மணலை பொதுப்பணித்துறையே விநியோகம் செய்யும் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து வாங்கப்படும் மணலுக்கு இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் இந்த புதிய நெறிமுறைகள் காரணமாக மணல் இறக்குமதி செய்து வருபவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.