சென்னை: புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும், பெத்தேல் நகர் மக்கள் புறம்போக்கு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளித்தால் மாற்று இடம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என  தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

சென்னை ஈச்சம்பாக்கம் அடுத்த புறம்போக்கு இடத்தில் பெத்தேல் நகர் உள்ளது. இந்த இடத்தை ஏராளமானோர் ஆக்கிமித்து வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். புறம்போக்கு நில அக்கிரமிப்பபை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டு உள்ளதால், இந்த இடமும் காலி செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடம் அறிவித்து, விரைவில் காலி செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், பெத்தேல்நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் அண்ணாதுரை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வீடில்லா ஏழை மக்கள் வீடுகளை கட்டி வசித்து வருவதாகவும், தங்களுக்கு தேவையான மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தந்துள்ளது என தெரிவித்துள்ளதுடன்,  தங்களுக்கு  ஆதார் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளது,  அரசு உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நாங்கள் இந்த இடத்துக்கு பட்டா கேட்டு, 15 ஆண்டு காலமாக போராடி வருவதாகவும், ஆனால், தற்போது, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் நிலமாக வகைமாற்றம் செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவும் பிறப்பித்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசின் மக்கள் நல திட்டப்படி அமல்படுத்தி, பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். மேலும்,  அரசு இங்கிருந்து   மக்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எந்த நேரத்திலும் வீடுகள் இடிக்கப்படலாம் என்பதால், தங்களை வெளியேற்ற தடை விதிக்க வேண்டும் எனவும், அரசின் மக்கள் நல திட்டப்படி பட்டா வழங்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்றும்  கோரினார்.

இதையடுத்து அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்கள் நல திட்டத்தில், மாற்று இடம், மறு வாழ்வு வழங்க வகை செய்துள்ளது என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பெத்ரேல் நகர் மக்கள் இநத இடத்தை காலி செய்ய தயார் என உத்தரவாதம் அளித்தால், அதுகுறித்து  உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்ய கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்ய அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, உத்தரவாதம் அளிப்பது தொடர்பாக விளக்கமளிக்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை பிப்ரவரி 9ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.