சென்னை: மீண்டும் தொற்று  பரவல்  ஏற்பட்டால், எதிர்கொள்ள தயாராக இருங்கள் என மாநில அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியது, தமிழகத்தின் சில பகுதிகளில் ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டது. இதுகுறித்து  சென்னை உயர் நீதிமன்றம் சூமோட்டோ (தாமாக முன் வந்து வழக்கு) வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறது. தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில், அரசு  தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது,  மாநிலத்தில் ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி போடும் பணிகள் முன்னேற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்தவர், தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், அரசு மருத்துவமனைகளில் ஏராளமான படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,   கொரோனா  மூன்றாவது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக கூறுவதற்கு எந்த அறிவியல் பூர்வ அடிப்படையும் இல்லை என்ற போதும், எதிர்காலத்தில் பரவல் அதிகரிக்கும் போது, அதை எதிர்கொள்ள, இரண்டாவது அலையை சமாளிக்க ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அகற்றாமல் தொடர வேண்டும். மேலும், ஆக்சிஜன் உற்பத்தியையும் தொடர வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தடுப்பூசி மருந்து வினியோகத்தையும்,  தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.