பெய்ஜிங்: சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உகான் நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டியன்ஜின் மாநகராட்சியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்கு நியூசிலாந்தில் இருந்தும், உக்ரைனில் இருந்தும் பால் பவுடர் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, உடனடியாக அந்த ஐஸ்கிரீம் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. ஆலையில் வேலை செய்துவந்த யாரேனும் ஒருவரிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கை துவங்கி உள்ளது.