சென்னை: மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என நடிகர் விஷால் திடீரென அறிக்கை வெளியிட்டுள்ளார்.  நடிகர் விஜயை தொடர்ந்து விஷாலும் அரசியல் கட்சி தொடங்குவார் என தகவல்கள் பரவி வந்த நிலையில், அவரது இன்றைய அறிவிப்பு, அவரின் அரசியலுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் அரசியலில் சமீப காலமாக இளைஞர்களின் ஆதிகம் அதிகரித்து வருகிறது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் வந்த பிறகு, திமுகவிலும் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். அவர் துணை முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மதிமுகவில், வைகோ மகன் துரைவையாபுரி, புதிய தமிழகம் கட்சியில் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் உள்பட பல அரசியல் கட்சிகளில் வாரிசுகள் களமிறங்கி வருகின்றனர்.

இதற்கிடையில், நடிகர் விஜய், 2026 தேர்தலில் போட்டியிடப்பபோவதாக அறிவித்துள்ளதுடன், தனது ரசிகர் மன்றத்த அரசியல் கட்சியாக மாற்றி, தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்து, இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில்,  நடிகர் விஷாலும் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. நடிகர் விஷால் ஏற்கனவே, ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டு முறை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால், சமீபகாலமாக பிரதமர் மோடியை பாராட்டி  வருவதுடன், சென்னை வெள்ளம் குறித்து திமுக அரசை சாடியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் விஷால்  திடீரெலன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  எதிர்காலத்தில் மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “சமூகத்தில் எனக்கு இந்தனை ஆண்டுகளாக ஒரு தடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும் அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், “இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு” என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் ‘தேவி அறக்கட்டளை’ மூலம் அனைவரும் கல்வி கற்க மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடம்தோறும் பல எண்ணற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர்களை படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு உதவிகளை செய்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, “நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன்.வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என கூறியுள்ளார்.