சென்னை: தாம்பரம் – நாகர்கோவில், நாகர்கோவில் – கச்சக்குடா   ரயில் சேவை நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக   தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

நாகர்கோவில் – கச்சக்குடா ரயில் சேவை நீட்டிப்பு:

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சக்குடா – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் இரண்டு மாதங்களுக்கு  நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி கச்சக்குடாவில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும் கச்சக்குடா – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (07435) பிப்ரவரி 2 முதல் மார்ச் 29 வரை இயக்கப்படும்.

மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில்இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை  06.30 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும் நாகர்கோவில் – கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயில்  (07436) பிப்ரவரி 4 முதல் மார்ச் 31 வரை இயக்கப்படும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள்  ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் — நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் (06012) பிப்.4, 11, 18, 25, மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8:05 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) பிப்.5, 12, 19, 26, மார்ச் 4, 11, 18, 25, ஏப். 1 ஆகிய திங்கள் கிழமைகளில் இரவு 8:55 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜன.31) காலை 8:00 மணி முதல் துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.