கராச்சி: இங்கிலாந்து உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வான 2ம் நாளில், எனது இரத்தத்தில் ஹெப்படைடிஸ் வைரஸ் இருக்கிறது என்று கேள்விப்பட்டவுடன் பெரிய ஏமாற்றமும் பதற்றமும் அடைந்தேன் என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் லெக்ஸ்பின்னர் ஷதாப் கான்.

இவர் இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருப்பதால், இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் ஆடவுள்ள ஒருநாள் தொடரில், இவருக்கு பதிலாக யாசிர் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேசமயம், இவருக்கான மருத்துவ சிகிச்சை அளிக்க, இங்கிலாந்தில் உள்ள சிறப்பான மருத்துவர்களை ஏற்பாடு செய்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். கடந்த மாதமே, ஹெப்படைடிஸ் கிருமி தொற்றிலிருந்து மீண்டு விட்டாலும், உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் இவருக்கான வாய்ப்பு இன்னும் கேள்வியாகத்தான் உள்ளது.

ஆனால், தற்போது முழு உடல் தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஷதாப் கான், இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன், உலகக்கோப்பை அணியில் சேர்ந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“எனது இரத்தத்தில் ஹெப்படைடிஸ் கிருமி தொற்று இருப்பதை அறிந்தவுடன் அதிக பதற்றமும் ஏமாற்றமும் அடைந்தேன். ஆனாலும், சக வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் எனக்கு பெரிய ஆறுதலாக இருக்கிறார்கள். எது நடந்தாலும் நன்மைக்கே..!” என்றுள்ளார் ஷதாப் கான்.