“நானாவது எய்ம்ஸ் கல்லை காட்டினேன்… ஆனால் எடப்பாடி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” உதயநிதி ஸ்டாலின் பேச்சு

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இன்று வரை அதற்கான வேலை நடைபெற வில்லை.

2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து மேடைக்கு மேடை விமர்சித்து வரும் நிலையில், “உதயநிதி ஸ்டாலின் தனது ஸ்க்ரிப்ட்டை மாற்ற வேண்டும்” என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நானாவது எய்ம்ஸ் கல்லை காட்டினேன்… ஆனால் எடப்பாடி திரு. நரேந்திர மோடி கிட்ட வெறும் பல்லை காட்டுறாரு…

2019-ல் மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டும் விழாவில் கல்லை வைத்துகொண்டு பல்லை காட்டிய போட்டோ இது” என்று எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியைப் பார்த்து சிரித்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை காண்பித்து பேசினார்.

மேலும், “நான் உங்களைப் போல் ஓ,பி.எஸ்.சைப் பார்த்தால் ஒரு பேச்சு சசிகலாவைப் பார்த்தால் ஒரு பேச்சு என்று மாற்றி மாற்றி பேசுகிற ஆள் இல்லை, எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அதைப் பெறும்வரை போராடுவோம்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.