சென்னை:

கொரேனா பரவல் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும், நடுத்தர மக்களுக்கு ரூ.5 ஆயிரமும் உதவி நிதி வழங்க வேண்டும் என மோடி உடனான கலந்துரையாட லின்போது தெரிவித்ததாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறினார்,

கொரோனா பாதிப்பு குறித்து அனைத்துக்கட்சி நாடாளுமன்ற கட்சித்தலைவர்களுடன் பிரதமர் மோடி சமீபத்தில கலந்துரையாடினார். இதில் திமுக சார்பில்  டி.ஆர்பாலு கலந்துகொண்டார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, பிரதமர் மோடியிடம் திமுக சார்பில்  கூறியது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

அரசியல் மாச்சரியங்களை, கருத்து வேறுபாடுகளைக் களைந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமரிடம் கூறியதாகவும், ஈரானில் 300 மீனவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

நாடு  இதுபோன்ற மோசமான நிலையை சந்தித்து வரும் நிலையில் 20 ஆயிரம் கோடி செலவில் நாடாளுமன்றம் தேவையா? அந்த நிதியை நாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கூறினார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், நகராட்சி, ஊராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பணியைப் பாராட்டுவதாகவும், அவர்களுக்கு   3 மடங்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சாதாரண ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ரூ.5000 வீதம் மாதம் ரூ.10 ஆயிரம் அளிக்க வேண்டும், நடுத்தர மக்கள் எல்பிஜி கேஸ் உபயோகிப்பவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாகவும் கூறினார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கா  மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதியில் தமிழகத்துக்குக் குறைவாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை போக்கப்படவேண்டும். தமிழகத்துக்கு அளித்த நிதி போதாது. கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறினார்.

கொரோனா தொற்று  குறிப்பிட்ட மதத்தினர் மூலமாகப் பரவுகிறது என மதச்சாயம் பூசுகிறார்கள். அதைத் தடுக்கும் விதமாக பிரதமர், உள்துறை அமைச்சர் பகிரங்கமாக தொலைக்காட்சியில் எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாகவும், ஊரடங்கை நீட்டிப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும் செய்துவிட்டு நீட்டிக்கலாம் என்று தெரிவித்தாகவும் கூறினார்.

நாட்டின் சிறு, குறு தொழிற்சாலைகளைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அதைவிடப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி ஆளுநர்கள், பொருளாதார நிபுணர்களைக் கொண்ட குழுவை அமையுங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  ஊரடங்கு குறித்து பொதுவாக கருத்து தெரிவிக்க முடியாது, நான் மருத்துவர் அல்ல.  இருக்கும் நிலைக்கு ஏற்ப இருக்கவேண்டும் என கூறியவர்,  ஊரடங்கை நீட்டிப்பதும், அகற்றுவதும் அரசு, சுகாதாரத்துறை எடுக்கும் முடிவு என்றார்.