சென்னை:

யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன் என சசிகலா எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் பேசினார்.

கூவத்தூரில் இன்று எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சசிகலா பேசுகையில், ‘‘ ஓ. பன்னீர் செல்வத்தையும் என்னையும் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அவர் அமைதியானவர் போல் தோற்றம் அளிப்பதாக கூறுகிறார்கள். ஆனால், நான் சிங்கத்துடனேயே இருந்தவள். இந்த குட்டி சிங்கத்தை பார்த்து சிலருக்கு பயம் உருவாகி உள்ளது. என்னுடன் இருக்கும் நீங்களும் சிங்கங்கள் தான்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘அ.தி.மு.க. ஆட்சியை எப்படியாது கலைத்து விடலாம் என சில எட்டப்பர்கள் உருவாகி உள்ளனர். ஆட்சியை கைப்பற்ற எதிரிகள் சதி வலை பின்னுகிறார்கள். அந்த வலையில் சிக்கவிடக் கூடாது. ஆட்சி நம் கைக்கு வந்த பின் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களும் உங்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களை எடுத்து கூறுங்கள்’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்,‘‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். டெல்லி வரை சென்று வெற்றி பெறுவோம். இந்த இயக்கத்தை ஆட்சியையும் உயிர் உள்ள வரை காப்பாற்றுவேன். இயக்கத்தையும் ஆட்சியையும் எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது என ஆவேசமாக தெரிவித்தார்.

பின்னர் அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘வசதி வாய்ப்புடன் அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் கட்சியை இரண்டாக பிரிக்க பார்க்கிறார். நானும் விவசாயி குடும்பத்திலிருந்து வந்தவள். நீங்கள் எனக்கு துணையாக இருந்தால் எதையும் நான் சாதிப்பேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன். எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ எடுப்பேன். ஜெயலலிதாவும் நானும் சென்னை சிறையையும் பார்த்திருக்கிறோம். பெங்களூரு சிறையையும் பார்த்திருக்கிறோம். பின்னர், ஆட்சியில் சாதித்தும் இருக்கிறோம்’’ என்றார்.

‘‘ஆட்சி அமைத்து ஜெயலலிதா சமாதிக்கு போவோம். அங்கு கேபினட் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுப்போம். ஜெயலலிதாவின் ஆசி பெற்று கோட்டைக்கு செல்வோம். ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் வைப்போம். இதுவே எனது வாழ்நாள் பாக்கியம். இதற்கு தி.மு.க. தடை போட முடியாது’’ என்றார்.