மயிலாடுதுறை: எதிர்க்கட்சிகள் என்றாலே குறைகள் தான் சொல்வார்கள். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை; சில குறைகள் இருக்கு, அவற்றை விரைவில் சரி செய்வோம்” மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள் என  சீர்காழியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்தவர், அங்கு பயனர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கினார்.  தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை வெளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், விளை நிலங்களையும்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  சீர்காழி புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடந்த நிகழ்வில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் உமையாள்பதி பகுதியில் மழைநீரால் சேதமடைந்த விளைநிலங்களையும், நெற்பயிர்களையும் மாண்புமிகு முதலமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து,  சீர்காழி வட்டம் பச்சை பெருமாநல்லூர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மழைபாதிப்பு, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது என்றவர்  நீங்கள் (நிருபர்கள்)  நினைப்பதைப் போல எதிர்ப்பையோ, கண்டனத்தையோ மக்கள் தெரிவிக்கவில்லை. பெரிய ஏமாற்றத்துடன் நீங்கள் வந்திருப்பதாக நான் அறிகிறேன்.   மக்கள் மிகுந்த திருப்தியுடன் உள்ளனர் என்றார்.

தமிழ்நாட்டிலேயே மயிலாடுதுறை, சீர்காழி போன்ற பகுதிகளில்தான் அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் இந்தப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உடனடியாக நேற்று முன்தினமே,  3 அமைச்சர்களையும், இங்குள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் அனுப்பிவைத்து நிவராணப் பணிகளை மேற்கொள்ள வைத்தேன். மாவட்ட ஆட்சியரும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஆனால்,  இந்தப்பணிகள் மட்டும் போதாது நானும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், நேற்று இரவோடு இரவாக பாண்டிச்சேரி வந்து தங்கி, காலை முதல் ஆய்வு செய்துள்ளேன்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், மேற்கொள்ளப்பட்ட உள்ள பணிகள் அனைத்து திருப்தியாக உள்ளது. எனவே மக்கள் திருப்பதியாகத்தான் உள்ளனர். அவர்களுக்கு இன்னும் சில குறைகள் உள்ளன. அவைகளும் இன்னும் 5, 6 நாட்களுக்குள் தீர்த்துவைக்கப்படும்  என்றார்.

மேலும்,  நெற்பயிர் இழப்பீடு குறித்து எதிர்க்கட்சிகள்  அரசியல் பிழைப்பு நடத்துவதற்காக ஏதேதோ கூறுவர். எதிர்க்கட்சிகள் என்றாலே குறைகள் தான் சொல்வார்கள். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை; சில குறைகள் இருக்கு, அவற்றை விரைவில் சரி செய்வோம்” மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள். மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்ற வகையில் விளை நிலங்கள் பயிர்சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு கூறினார்.