சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், புதிய வாக்காளர் சேர்ப்பு,  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய இந்த 4 நாட்கள் முகாம் நடைபெறுகிறது. அதன்படி, கடந்த 12, 13ந்தேதிகளில் தமிழகம் முழுவதும்  நடைபெற்ற முகாமில்  7 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

இதையடுத்து18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயர்களை சேர்க்கவும், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும்  இந்த மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி,  மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. மேலும் ஆன்லைன் வழியாகவும் நேரடியாகவும் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பங்களை கொடுத்தனர்.

அதன்படி கடந்த 2 நாள் நடைபெற்ற முகாமில்,  7லட்சத்து 10 ஆயிரத்து 274 பேர் மனுக்கள் அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதில் 4லட்சத்து 44 ஆயிரத்து 19 பேர் புதிதாக தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில்  44,398 பேர் மனு கொடுத்துள்ளனர். அடுத்ததாக சேலம் மாவட்டம் 41,301, திருவள்ளூர் மாவட்டம் 39,320 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவது தொடர்பாக 77,698 விண்ணப்பங்களும், திருத்தம் செய்வது தொடர்பாக 1 லட்சத்து 30 ஆயிரத்து 614 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் பணிகள் நடந்தன. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் சென்னையில் 23,519 பேர் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.