சென்னை:  நான் ஜெயலலிதாவின் அண்ணன் – எனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என மைசூரைச் சேர்ந்த முதியவர்  வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாறு ஒரு திகில் படம் போல உள்ளது. அவரது வாழ்வின் மர்ம முடிச்சுகள் இதுவரை அவிழ்க்கப்படாமலேயே உள்ளது. இருந்தாலும், அவரது மக்கள், அண்ணன், வாரி என அவ்வப்போது சிலர் புறப்பட்டு வருவதும் வாடிக்கையாக உள்ளது.  ஏற்கனவே பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தன்னை ஜெ.வின் மகள் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதுபோல,  ஜெ.விற்கும், சோபன்பாவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும்,, அந்த பெண் வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டதாகவும்  தகவல்கள் பரவின.  அதுபோல, ஜெயலலிதாவின் வாழ்க்கை ரகசியம், தற்போதுள்ள அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவுக்கு தெரியும் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால், யாரும் அதுகுறித்த உண்மையான, ஆதாரப்பூர்வமான தகவல்களை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்,  மறைந்த ஜெயலலிதாவின் சொத்துக்களில் பங்கு கேட்டு  கர்நாடக மாநிலம் மைசூர் வியாசரபுராவைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,  என்னுடைய பெற்றோர் ஆர்.ஜெயராம் ஜெ.ஜெயம்மா. இவர்களுக்கு நான் ஒரே வாரிசு. என் தந்தை வேதவல்லி என்ற வேதம்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் பிறந்தனர். இந்த வகையில் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் என்னுடைய சகோதரர் மற்றும் சகோதரி ஆவர்.  1950-ம் ஆண்டில் என் தந்தையிடம் ஜீவனாம்சம் கேட்டு மைசூர் கோட்டில் என் அம்மா வழக்கு தொடர்ந்தபோது, வேதவல்லி அவரது வாரிசுகள் ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்தார். ஆனால், இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது.

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு ஜெயக்குமார் இறந்து விட்டார். ஆனால் இன்றைய தினத்தில் சகோதரன் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடி வாரிசு நான் மட்டுமே உள்ளேன். எனவே ஜெயலலிதாவின் சொத்துக்களில் 50 சதவீதம் எனக்கு தர வேண்டும். தீபா, தீபக் தான் சட்டப்படி வாரிசு என்று அறிவித்து 2020-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால் உயர்நீதிமன்ற  நிர்வாக உத்தரவிற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் இம்மனு விசாரணை செய்யப்பட்டது. மனுவை பட்டியலிடுவது தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்கும்படி மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

வாசுதேவன் ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு, ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா என்பவர் பரபரப்பை ஏற்படுத்தியபோது,   தான்தான் ஜெயலலிதாவின் அண்ணன் என கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அப்போது, எனது தந்தை ஜெயராமன் இரண்டாவதாக வேதம்மாள் என்கிற சந்தியாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா. அந்த வகையில் ஜெயலலிதா எனக்கு தங்கை முறை. அதன் பின்பு ஜெ.வின் அம்மா சந்தியா சினிமா கலை இயக்குனர் தாமோதப்பிள்ளை என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு சைலஜா என்கிற மகள் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால், சைலஜாவை சந்திக்க முடியவில்லை.

என்னைப் பற்றி கேள்விப்பட்டு ஒரு நாள் சைலஜாவும், அவரது வளர்ப்பு மகள் அம்ருதாவும் என் வீட்டிற்கு வந்தனர். அவர் கூறியதை வைத்து, அவர்தான் ஜெ.வின் தங்கை என்பது ஏற்றுக்கொண்டேன். அதன்பின், அவர் குடும்பத்திற்கும் எங்களுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. அப்போதுதான் உடல்நிலை சரியில்லாமல் சைலஜா மரணமடைந்தார். அதன்பின் அவரின் கணவர் பார்த்தசாரதியும் மரணமடைந்தார்.; அப்போது எனது தந்தை வழி உறவினர்களான ரஜினிநாத், லலிதா ஆகியோரை அம்ருதாவிற்கு அறிமுகம் செய்து வைத்தேன் என கூறியதுடன், ஜெயலலிதாவிற்கு சோபன்பாபு மூலம் குழந்தை பிறந்தது என்று சசிகலாவிற்கும், நடராசனுக்கும் நிச்சயம் தெரியும். இப்போது தீபா, தீபக், நானும்தான் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு என்றும் வாசுதேவன் கூறியது குறிப்பிடத்தக்கது.